''பள்ளிவாசல்களை மூடுமாறு தடை விதித்தமை நீங்கள் கூறும்வரை எனக்கு தெரியாது'': ஹக்கீமிடம் ஜனாதிபதி
தெஹிவளை பிரதேசத்தில் மூன்று
பள்ளிவாசல்களை மூடுமாறு தெரிவிக்கப்படுவது பற்றி தம்மிடம்
அமைச்சர் ஹக்கீம் புதன்கிழமை கூறும்வரை வேறெவரும் அதுபற்றி
சொல்லவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த
விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் ஜனாதிபதி அமைச்சர்
ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.
தெஹிவளைப் பகுதியில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு
பொலிஸார் தடை விதித்துள்ளமை குறித்தும் முஸ்லிம் பள்ளி வாசல்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பிலும் ஜனா திபதி மஹிந்த
ராஜபக்ஷவின் கவனத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும்
நீதியமமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொண்டுவந்துள்ளார்.
நேற்றுக் காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச்
சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் விடயம் குறித்து அரசாங்கமானது
உரிய கவனம் செலுத்த வேண்டும். பள்ளிவாசல்கள் தொடர்பான விவகாரம்
அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு முஸ்லிம்கள்
மத்தியிலும் கொந்தளிப்பையும் விசனத்தையும் உண்டுபண்ணுகின்றது.
எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
தெஹிவளை களுபோவில மஸ்ஜிதுல் தாருல் ஷாபி, தெஹிவளை தாருல் அர்க்கம்,
தெஹிவளை அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா ஆகிய பள்ளிவாசல்களை மூடுமாறு
பொலிஸார் வற்புறுத்துவது பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, பள்ளிவாசல் தொடர்பான விவகாரம்
அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு முஸ்லிம்கள்
மத்தியில் கொதிப்பையும் விசனத்தையும் உண்டு பண்ணுவதாகவும்
கூறியுள்ளார்.
விஷம சக்திகளால் உந்தப்பட்டு, அரசாங்க உயர்மட்டத்திற்கு தெரியாத
விதத்தில் பொலிஸார் தான்தோன்றித்தனமாக இவ்வாறான இன முறுகலை
ஏற்படுத்தக்கூடிய சமய விரோத நடவடிக்கைகளில் நேரடியாக
ஈடுபடுவது கண்டிக்கப்பட வேண்டியதென்று அமைச்சர் ஹக்கீம்
கூறியுள்ளார்.
மூன்று பள்ளிவாசல்களை மூடிவிடுமாறு தெரிவிக்கப்படுவது
தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் ஹக்கீமிடம்
தெரிவித்துள்ள ஜனாதிபதி, தெஹிவளை பிரதேசத்தில் மத்ரஸா
நடத்துவதென்று அனுமதி பெற்று தொழுகை நடத்தும் ஓரிடத்தைப் பற்றி
மட்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லியுள்ளார்.
அதுபற்றி அமைச்சர் பெளசியும் தம்மிடம் சுட்டிக்காட்டி கவலை
தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்கள் நாள்தோறும் ஐவேளைகள் தொழுகையில்
ஈடுபடுவது இஸ்லாத்தின் கட்டாய கடமைகளில் ஒன்று என்ற காரணத்தினால்
மத்ரஸாக்களில் தொழுவதைக்கூட தடுக்கக்கூடாதென ஜனாதிபதியிடம்
தெரிவித்துள்ளார்.





0 comments:
Post a Comment