அண்டார்டிக் கடலின் உறைபனியில்
சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது
பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு
கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது.ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்திலிருந்து தனது பயணத்தை துவக்கிய இந்த ரஷ்ய ஆய்வுக்கப்பல், பனிப்பாறைகளில் சிக்கியதைத் தொடர்ந்து அதை மீட்கும் பணியில் ஈடுபட்ட மூன்று பனி உடைப்பு கப்பல்களுமே அந்த கப்பலை சென்று அடைய முடியாமல் இடையிலேயே பனியில் சிக்கி நின்று போயின.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழியாக பயணித்த மாய்சனும் இந்த வழியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பனியில் சிக்கி ஒரே இடத்தை விட்டு நகரமுடியாமல் நின்றிருந்தார். அப்போது அவரது சக பயணிகள் இருவர் இறந்து போனார்கள் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.





0 comments:
Post a Comment