பள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்
கண்டி மாவட்டத்தின் பூஜபிட்டிய பிரதேச சபை பிரிவிலுள்ள அம்பதென்னை, முல்லேகமயில் பள்ளி வாயல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலா பள்ளிவாசல் மீது நேற்று இரவு இனம்தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வாகனம் ஒன்றில் வந்த குழு ஒன்று கற்களை எரிந்து மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் பின்னர் பள்ளி வாயலின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத் தாக்குதல் காரணமான பள்ளி வாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கள முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையான வாழும் இப் பிரதேசத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காக சிலர் திட்டமிட்டு இச் செயலை செய்திருக்கலாம் என பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த தேரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியை கேள்வியுற்ற பௌத்த தேரர்கள் உற்பட பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.
பிரதி அமைச்சர் அப்புல் காதர் மற்றும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட பலர் இவ் விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச் .என். பீ. அம்பன்வல தலைமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.





0 comments:
Post a Comment