பேரியல் அஸ்ரப் பாராளுமன்ற உறுப்பினராக விரைவில் சத்தியப்பிரமாணம்?
முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
தற்போது சிங்கப்புர் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றும் பேரியல் அஸ்ரப் கடந்த பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள பி.தயாரத்ன தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு வட மாகாணத்தின் ஆளுநர் பதவியை பாரமெடுக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியாக இருந்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அந்தக்கட்சியை கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோடு இணைந்து கொண்டவர். தேர்தலில் தோல்வியடைந்ததும் தூதுவர் பதவியை பொறுப்பெடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாணத்தில் புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் திர்மானித்தள்ளதால் அதற்குப் பொருத்தமானவராக பி.தயாரத்ன இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமல்ல அரசியலில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட தயாரத்னவின் செல்வாக்கு அம்பாரையில் குறைந்துவிட்டது என கதைக்கப்படுவதால் ஆளுநர் பதவியை பொறுப்பெடுத்து தப்பித்துக்கொள்ளலாம் என தயாரத்ன கருதுவதாலும் தயாரத்னவின் வெற்றிடத்திற்கு பேரிய்ல் அஸ்ரப் எவ்வித பிரச்சினையும் இன்றி நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் பேரியல் அஸ்ரபின் புதல்வர் அமான் அஸ்ரபை களமிறக்க அரசாங்கம் விரும்பியுள்ளதாகவும். அதற்கு பேரியல் அஸ்ரப் உடன்பட்டால் மாத்திரதே அமைச்சர் தயாரத்ன தனது பதவியை ராஜினாமாச் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார் எனவும் ஒரு தகவல் உள்ளதாம்.
அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியை தடுப்பதற்கும் பேரியல் அஸ்ரபின் வரவை மேல்மட்டம் பயன்படுத்துவதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
பேரியல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் பெரும் பங்களிப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கடந்த பொதுத்தேர்தலில் சேகு இஸ்ஸதீனின் ஆதரவு இவருக்கு கிடைக்காததே தோல்விக்கு காரணம் என பெரிதும் நம்பப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனை இணைத்துக்கொண்டு தனது அரசியலை பேரியல் அஸ்ரப் முன்னடுப்பாராயின் வெற்றி நிச்சயம்தான்.





0 comments:
Post a Comment